
இந்த வருடம் 38 நாட்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மூன்று தமிழ் அரசியற்கைதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. 25.09.17 அன்று தொடங்கிய இப்போராட்டத்தை மதியரசன் சுலக்சன், ராசதுரை திருவருள் மற்றும் கணேசன் தர்சன் ஆகியோர் நடத்தினர். இவர்களின் இப் போராட்ட விடயத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பெடுத்ததன் அடிப்படையில், இம்மூவரின் உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியற்கைதிகளின் நிலைமைக்குப் பொறுப்புக்கூற வேண்டிய ஐ.நாவையும் மற்றும் அமெரிக்காவையும் நோக்கிய ஒரு பேரணி, யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது. இருப்பினும் இப்புள்ளியிலிருந்து தமிழர்களின் போராட்டம் எவ்வாறு தொடரப்போகின்றது என்பதும் தாயகத்தில் மேற்குலகத்தை நோக்கிய போராட்டங்கள் ஆரம்பித்தமை தொடர்பாக, புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றனர் என்பதும் கேள்விக்குறியாகவுள்ளன.

யார் இந்த சுலக்சன்?
2009ம் ஆண்டு மே 18 அன்று, வட்டுவாகலில் சுலக்சன் அவர்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, TID என்றழைக்கப்படும் „பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்“ 09.01.12 வரை கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்பு வவுனியாவிலுள்ள „ரேமண்ட்“ சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டு, வவுனியா உயர்நீதி மன்றத்தில் இவரின் விசாரணை நடைபெற்றது. சுலக்சன் தொடர்பான குற்றப்பத்திரிகை சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்ததால், அக்குற்றப்பத்திரிகையைத் தமிழில் மொழிபெயர்க்குமாறு உத்தரவிடப்பட்டு, இவரின் வழக்கு பிற்போடப்பட்டது. இக்குற்றப்பத்திரிகையிலுள்ள சுலக்சனின் வாக்குமூலம் சித்திரவதையின் அடிப்படையிலேயே பதிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(1)

7 ஆண்டுகளாகத் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் சுலக்சன் அவர்கள், 22.02.16 அன்று தனது வழக்கை நீதிமன்றத்தில் விசாரிக்குமாறு அல்லது தன்னை விடுதலை செய்யுமாறு தனது முதலாவது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். இவருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து, இவ்வுண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.(1)(2)
பின்பு 2017ம் ஆண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சுலக்சன் மீது ஒரு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சித்திரவைதைக்கு உள்ளாகப்பட்ட வேறு அரசியற்கைதிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இவ்வழக்கு பதியப்பட்டிருந்தது. அத்துடன் இவரின் வழக்கை சிங்கள நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முயற்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுலக்சன் அவர்கள் 20.08.17 அன்று தனது இரண்டாவது உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டார். இவரின் போராட்டத்தில் ராசதுரை திருவருளும், கணேசன் தர்சனும் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்களின் வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கபட்டபின், தங்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை இவர்கள் நிறுத்தியிருந்தனர்.(3)(4)
இவ்வாக்குறுதிக்குப் பின்னும் இவர்களின் வழக்குகள் அனுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன என்பதை அறிந்தவுடன், இம்மூவரும் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை 25.09.17 அன்று மீண்டும் கையிலெடுத்தனர்.(4)
யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் சர்வதேசம் நோக்கிய போராட்டமும்
மதியரசன் சுலக்சன், ராசதுரை திருவருள் மற்றும் கணேசன் தர்சன் ஆகியோர் 38 நாட்களாக தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இவர்களின் விடயத்தை பொறுப்புக்குகூறியதன் அடிப்படையில் இவ்வுண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் அடிப்படையில் 14.11.17 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் ஒரு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்களோடு ஏனைய தமிழ் மாணவர்களும் பங்கெடுத்தனர். இப்பேரணியின் மகஜர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐ.நாவின் அலுவலகத்துக்கும் மற்றும் அமெரிக்க தகவற்கூடத்துக்கும் வழங்கப்பட்டது.(5)

இம் மகஜரில் சர்வதேசத்தை நோக்கிய சில முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன
1. தமிழரின் ஆயுதப் போராட்டம் சுயநிர்ணய உரிமையைக் கோரும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு காலனிய ஆட்சியின் பின்விளைவுகளையும் இனக்குரோதத்தையும் எதிர்த்தது . ஆதலால் இதனை ஒரு உள்நாட்டுப் பிரச்சனையாகப் பார்க்க முடியாது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் „ஜெனீவா உடன்படிக்கையை“ ஏற்றுக்கொண்டிருந்தனர். இவ்வுடன்படிக்கையின்படி கைது செய்யப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அவர்களுக்குச் சார்பாக உள்ளவர்கள், போர்க்கைதிகளாகப் பார்க்கப்பட வேண்டும். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் போர்க்கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிந்த காரணத்தினால், போர்க்கைதிகளை சர்வதேசமே பொறுப்பில் எடுக்க வேண்டும். இதனை சர்வதேசம் மேற்கொள்ளாததினால், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களை இலங்கை அரசாங்கம் அரசியற்கைதிகளாக ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். (5)
2. 2008 தமிழீழத்தை விட்டு ஐ.நாவின் நிபுணர்கள் வெளியேறியது மற்றும் 2009ம் ஆண்டில் தமிழ் மக்களை பாதுக்காக்கவும், ஐ.நா தவறியது. அத்தோடு தமிழர்களின் ஜனநாயக ஆணை பெற்ற வடமாகாண சபை, இனவழிப்புத் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற ஒரு தீர்மானித்தை நிறைவேற்றியபோதும், ஐ.நா ஒரு மட்டுப்படுத்தப்பட்ட விசாரணையையே 2013ம் ஆண்டு மேற்கொண்டது. இவ்விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்திருப்பினும், 2015ம் ஆண்டு நிலைமாறுகால நீதியின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் ஐ.நா வின் மனித உரிமைக்கான அதிகாரியான „Zeid Ra’ad Al Hussein“ அவர்கள், அரசியற்கைதிகளை „பாதுகாப்புத் தொடர்பான கைதிகள்“ என்று வர்ணித்துள்ளார். ஆதலால் இவர்களை அரசியற் கைதிகளாக ஏற்றுக்கொள்ள இலங்கை மீது ஐ.நா அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய கடப்பாட்டிலுள்ளது.(5)(6)

3. சமாதான காலப் பகுதியில் இணைத்தலைமை நாடுகளில் அமெரிக்காவும் அங்கம் வகித்தது. இருப்பினும் சமாதான காலப்பகுதியில் சுனாமி அழிவின் மீள்கட்டுமானப்பணிகள் தடைசெய்யப்பட்டமைக்கு அமெரிக்காவின் நிலைப்பாடும் ஒரு பெரும் பங்கினை வகித்தது. அத்தோடு யுத்தம் முடிவடைந்த பின், 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐ.நாவின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பெரும் ஈடுபட்டினைக்காட்டியது அமெரிக்கா. அத்தோடு 2017ம் ஆண்டு இலங்கைக்கு மேலதிக இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியது. அதுமட்டுமில்லாமல் இலங்கைத் தீவில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளில் அமெரிக்காவின் பங்கு தொடர்பான கேள்விகளும் எழுகின்றன. இதனால் தனது கடமையை உணர்ந்து தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்ய, இலங்கை மீது அழுத்தத்தைப் பிரியோக்கிக்க அமெரிக்கா முன்வரவேண்டும்.(5)
தமிழர்களின் போராட்டத்தின் எதிர்கால நடவடிக்கையும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைப்டுபாடும்
தாயகத்தில் உள்ள தமிழர்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், சர்வதேசத்தின் பங்கினை சரியாக உணர்ந்து அதற்கு எதிரான கோரிக்கைகளை இப் பேரணியின் மூலம் முன்வைத்துள்ளனர். இது ஒரு தன்னிச்சையான நடவடிக்கையா அல்லது இது, அங்கு நடைபெறப் போகும் போராட்டத்தின் ஒரு புதிய பரிமாணமா என்பது அங்குள்ள மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
ஆனால் அங்கு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக, தேசியம் பேசும் புலம்பெயர்ந்த அமைப்புகள் மௌனம் சாதித்தமை பல கேள்விகளை எழுப்புகின்றது. அத்துடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட பேரணியில் கையளிக்கப்பட்ட மகஜர் தொடர்பாக பல பிரபல்யமான தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதித்தமையும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.(7)
இதனால், தேசியம் பேசும் புலம்பெயர்ந்த அமைப்புகளும் பல பிரபல்யமான தமிழ் ஊடகங்களும், மேற்குலக அல்லது பிராந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிட்டனவா என்பதை அறிய வேண்டிய கட்டாயத்தில், ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
நிதர்சன்
(1) https://www.tamilnet.com/art.html?catid=13&artid=38350
(2) https://www.tamilnet.com/art.html?catid=13&artid=38762
(3) https://www.tamilnet.com/art.html?catid=13&artid=38779
(4) https://www.tamilnet.com/art.html?catid=13&artid=38818
(5) https://www.tamilnet.com/art.html?catid=79&artid=38869
(6) http://www.ohchr.org/EN/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=17025&LangID=E
(7) http://www.tamilguardian.com/content/hundreds-jaffna-uni-students-march-protest-detention-tamil-political-prisoners
Schreib einen Kommentar