அக்கினிப் பறவைகள் அமைப்பினரின் நிலைப்பாட்டில் உறுதியுடன் இணைந்து நிற்கும் சிட்னி வாழ் இளைஞர்கள்

அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி மாநகரில், அக்கினிப் பறவைகள் அமைப்பினரின் ‘Structures of Tamil Eelam: A Handbook’ எனும் நூல் 09.06.19 அன்று அந்நாட்டில் உத்தியோகபூர்வமாக வெளியீடுசெய்யப்பட்டது. தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி இந்நூல் சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் கூட்டுமுயற்சியால் வெளீயீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வினை,வைத்திய கலாநிதி சாம்பவி பரிமளநாதன் அவர்கள் மங்களவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் சார்பாக ஒரு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இவ்வுரை நிகழ்விற்கு வந்தோரை வரவேற்று இந்நூல்வெளியீட்டின் முக்கியத்துவத்தை விழக்கியதோடு, தமிழீழ மக்களினை எமது அடுத்தகட்ட போராட்டத்தின் காலப்பகுதியிற்கும் வரவேற்று தெளிவான செயற்பாட்டிற்கான வேண்டுகோளையும் முன்வைக்கும் வகையில் அமைந்தது. 

நூல் வெளியீட்டு நிகழ்வின் பிரதான பேச்சாளர்கள்; செல்வி கவிநிலா நக்கீரன் மற்றும் திரு குலசேகரம் சஞ்சயன் அவர்கள் இரு கோணங்களிலுருந்து தங்களது அனுபவங்களின் அடிப்படையில் உரைகளை வழங்கினார்கள். புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் நடைமுறை அரசினைக் காணாத ஓர் இளவலாகிய செல்வி கவிநிலா அவர்கள்,இந்நூலினை அடிப்படையாக வைத்து எமது அடுத்த கட்ட போராட்டத்தினை எவ்வாறு முன்னகர்த்த வேண்டும் என்று தனது கருத்துகளை பதித்தார். 

நடைமுறை அரசின் ஓர் முக்கிய அலகாகிய தமிழீழ வைப்பகத்துடன் பணியாற்றியவராகிய திரு குலசேகரம் சஞ்சயன் அவர்களும் தனது கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் அவ்வேளையில் பதிந்ததோடு, ஓர் வேண்டுகோளையும் அங்குவந்த மக்களுக்கு முன்வைத்தார். இந்நூலினை ஈழம் சார்ந்து நாட்டம் கொண்டவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், தமிழீழமெனும் கோட்பாட்டினை இழிவு செய்பவர்களிடமும் இந்நடைமுறை அரசின் ஆவணமாகிய இந்நூலினூடாக விளக்கி, வலியுறுத்தவேண்டும் என்றார். 

இந்நூலின் முதலாவது பிரதி மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு, லெப். கேணல் அக்பரின் மூத்த மகனாகிய செல்வன் குமரனால்,இளைஞர்களின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது. நடைமுறை அரசின் உருவாக்கத்திற்குப் பின் பிறக்கும் இளைஞர்களுக்கும் எமது போராட்டத்தின் நுட்பங்கள் சென்றடைய வேண்டும் எனும் காரணத்திற்காகவும், எமது போராட்டம் இவர்களால் முன்னகர்த்தப்படும் என்பதை வலியுறுத்துவதற்காகவும், இம்முதற் பிரதி திரு சஞ்சயன் மற்றும் செல்வி கவிநிலா அவர்களால் செல்வன் குமரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டு,அச்சிறுவனால் மாவீரர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து,சிட்னி வாழ் இளைஞர்களின் சார்பாகவும், அக்கினிப் பறவைகளின் சார்பாகவும், சிட்னி வாழ் அங்கத்தவர்களுக்குச் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. இதில் கல்வி, வர்த்தக மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றோர் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக Australian Greens Partyன் முன்னால் அங்கத்தவரும், முன்னால் செனட்டருமாகிய Lee Rhiannon அவர்களுக்கும் சிறப்புப் பிரதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இளைஞர்களால் உருப்பெற்ற இந்நிகழ்வையும் இந்நூலையும் பாராட்டிய இவர், இது பல சமூகங்களுக்கும் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய ஓர் அரிய ஆவணம் என கூறினார். 

தேசியச் செயற்பாட்டாளர், மற்றும் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர், வைத்திய கலாநிதி சாம்பவி பரிமளநாதன் (Dr Sampavi Parimalanathan)
முன்னாள் செனட்டர் மற்றும் Greens கட்சியின் பிரதிநிதி, லீ ரியனன் (Mrs Lee Rhiannon)
தேசியச் செயற்பாட்டாளர், நாடுகடந்த தமிழீழத்தின் முன்னாள் பிரதிநிதி, தமிழர் இளையோர் அமைப்பு – அவுஸ்திரேலியாவின் முன்னாள் அங்கத்தவர், திரு சேரன் சிறீபாலன் (Mr Seran Sribalan)
தேசியச் செயற்பாட்டாளர் திரு சுஜன் செல்வன் (Mr Sujan Selvan)
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் (அவுஸ்திரேலியா) ஒருங்கினைப்பாளர் மற்றும் தேசியச் செயற்பாட்டாளர், திரு ஜனகன் சிவராமலிங்கம் (Mr Janahan Sivaramalingam)
பிரதான ஊடக அனுசரனையாளர், இன்பத்தமிழ் ஒலியின் திரு பாலசிங்கம் பிரபாகரன் (Mr Balasingam Prabhakaran)
Palmera Projectsன் பிரதிநிதி செல்வி சியாமினி சந்திரா (Ms Shaminie Chandra)
தேசியச் செயற்பாட்டாளர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியாவின் அங்கத்தவர், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி திரு சுப்பையா ஸ்கந்தகுமார் (Mr Suppiah Skandakumar)
தேசியச் செயற்பாட்டாளர் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அவுஸ்திரேலியாவின் அங்கத்தவர் திரு பாலசுந்தரம் சுதர்சன் (Mr Balasundaram Sutharsan)
சிட்னித் தமிழ் அறிவகத்தின் (நூலகம்) செயலாளர், திரு மணிமாறன் அச்சுதன் (Mr Manimaran Atchuthan)
அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையுன் பிரதிநிதி, திரு மனோகரன் (Mr Manokaran)
மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் நிர்வாகக் குழு உருப்பினர், திரு. கில்பேர்ட் தேவதாசன் (Mr Gilberd Thevathasan)
ஓபேர்ன் தமிழாலயத்தின் நிர்வாகக்குழு உருப்பினர், திரு சசீந்திரன் மகாலிங்கம் (Mr Saseendran Mahalingam)
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் சார்பாக திருமதி விஜிதா விஜயமுகுந்தன் (Mrs Vijitha Vijayamuhunthan)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பழைய மாணவர் சங்கம் – அவுஸ்திரேலியாவின் சார்பாக, திரு ரிஷியேஸ் சிவபாலசிங்கம் (Mr Rishies Sivabalasingam)
தமிழ் ஆர்வலர், திரு லோகதாசன் (Mr Logathassan)

இதனைத் தொடர்ந்து, புரட்சி Mediaவின் ஒருங்கிணைப்பாளராகிய திரு. நிதர்சன் அவர்கள், அமைப்பின் சார்பாக ஏற்புரையினை ஒலிப்பதிவினூடாக வழங்கினார். அடுத்த கட்ட போராட்டத்தினைப் பற்றி அவர் விளக்கிய விடயங்களை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பினை சிட்னி வாழ் இளைஞர்களின் சார்பாக செல்வி ஶ்ரீபைரவி மனோகரன் அவர்கள் வழங்கியது, அங்கு வந்த இளைஞர்களுக்கும் தெளிவினை ஏற்படுத்தியது. 

அக்கினிப் பறவை அமைப்பினரால் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட எழுச்சிப் பாடல்களின் கோர்வைக்கு ஓர் இளம் நடனக் குழு எழுச்சி நடனம் ஒன்றினை வழங்கினார்கள். 

இதனைத் தொடர்ந்து, அக்கினிப் பறவைகள் அமைப்பின் சார்பாக, செல்வன் யதுராம் அவர்கள் வழங்கிய நன்றியுரையினைத் தொடர்ந்து உறுதிமொழியுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது. மாவீரர் இட்ட பாதையிலும், தலைவர் காட்டும் வழியிலும் உறுதியாகப் பயனிக்கும் அக்கினிப் பற்வைகள் அமைப்பினரினைப் போன்று, சிட்னி வாழ் இளைஞர்களும் தம்மால் முடிந்தவரை செயற்பட முனைவதாகக் கூறினார்கள். 

“தமிழர் எனும் எமது அடிபணியா அடையாளத்தை எமது சிந்தனை, செயல் அனைத்திலும் முன்னிறுத்தி எம் தேசத்தின் விடியல் வரை எமது அடிப்படைக்கொள்கைகளை விட்டுக்கொடுக்காது தெளிவாகச் செல்வோம். 

ஈழத்தமிழ் இளைஞர்களாகிய நாம், எமது போராட்டத்தின் முன்னிலையில் நின்று, தமிழிறைமையினை என்றும், எதிலும், எப்படியும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று உறுதியெடுத்துக்கொள்கிறோம். வெல்வது உறுதி” என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் செல்வி ஆருதி குமணன் அவர்கள் அங்கு கூடிய மக்களின் சார்பாகப் பிரமாண மெடுத்துக் கொண்டதோடு, மக்களின் “தமிழரின் தாகம்,தமிழீழத் தாயகம்” எனும் ஒருங்கிணைந்து கோசத்துடன் மிகவும் உணர்வாக இந்நிகழ்வு நிறைவுபெற்றது. நூல்வெளியீட்டு நிகழ்வினைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட மக்களினால் ஏராளமான நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டமையும் மேலும் அந்நாட்டின் வேறு மாநிலங்களில் இந்நூலின் வெளியீட்டு நிகழ்வினை ஒழுங்கமைப்பதற்காக பலர் முன்வந்தமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.


Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*