அக்கினிப் பறவைகள் அமைப்பினரின் நிலைப்பாட்டில் உறுதியுடன் இணைந்து நிற்கும் மெல்பேர்ன் வாழ் இளைஞர்கள்

அவுஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் மாநகரில், அக்கினிப் பறவைகள் அமைப்பினரின் “Structures of Tamil Eelam: A Handbook” எனும் நூல் 17.08.19 அன்று மக்கள் நிறைந்த மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளினை ஒட்டி இந்நூல் மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் முயற்சியால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வு ஈகச்சுடர்கள் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. Cholai Children’s Welfare Association எனும் கட்டமைப்பில் இளம் பெண்மணியாக இருக்கும்பொழுது பணியாற்றிய திருமதி சுகந்தி பிரபாகரன் அவர்கள் செஞ்சோலை மாணவிகளினது நினைவாக ஈகச்சுடரினை ஏற்றிவைக்க, தொடர்ந்து எமது மாவீரர்களுக்கான ஈகச்சுடரினைத் தமிழ்த்தேசிய ஆர்வலர் திருமதி மலர்விழி அவர்கள் ஏற்றிவைத்தார்.

செஞ்சோலை மாணவிகளுக்கான ஈகச்சுடர்
மாவீரர்களுக்கான ஈகச்சுடர்

செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைகளின் பல ஆவணக்கோர்வைகள் இந்நிகழ்வில் அவ்வமைப்பினரிடமிருந்து பெறப்பட்டு,காட்சிப்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி, செஞ்சோலைச் சிறார்களால் தயாரிக்கப்பட்டு,வெளியிடப்பட்ட “இளங்கதிர்” சஞ்சிகையின் பிரதிகள்,செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைகளின் பல ஆவணக்கோர்வைகள்
செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைகளின் பல ஆவணக்கோர்வைகள்

இதனைத் தொடர்ந்து, மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் சார்பாக ஒரு வரவேற்புரை செல்வன் யதுவால் நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையானது செஞ்சோலை நினைவு நாளின் நினைவாக இந்நூல் மெல்பேர்ன் மாநிலத்தில் வெளியடப்டுகின்றமைக்கான காரணத்தினையும்,இந்நூலின் சிறப்புகளையும் விளக்கியதோடு,தமிழீழ மக்களை எமது அடுத்தகட்டப் போராட்டத்தின் காலப்பகுதிக்குள் வரவேற்குமுகமாகவும் அமைந்தது. 

மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் சார்பாக ஒரு வரவேற்புரை செல்வன் யது

Australian Medical Aid Foundationல் பணிபுரிந்து வருபவராகிய வைத்தியக் கலாநிதி சதீஸ் நடராஜா அவர்கள், செஞ்சோலை மீது இடம்பெற்ற தாக்குதல் பற்றியும், செஞ்சோலை போன்ற தமிழீழக் கட்டமைப்புக்களைப் பற்றியும் ஓர் சிற்றுரையினை ஆற்றினார். தற்பொழுது தாய் தந்தையரை இழந்து நிற்கும் சிறுவர்கள், அவர்களது நலன் கருதி நிறுவப்படும் இல்லங்களில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை நிலவரங்களையும் அம்பலப்படுத்தினார். குறைந்த வளங்களைக்கொண்டு மிகவும் உயரிய நல்லதோர் உளவியற் சூழலையும் தமிழீழ நடைமுறை அரசால் இவ்வில்லங்கள் போன்ற கட்டமைப்புக்களில் நிறுவக்கூடியதாக இருக்கும் பொழுது, கொடூரமான மனித உரிமைத் துன்புறுத்தல்களுக்கு இன்றும் ஆளாக்கப்படும் சிறவர்களுக்கு அவ்வாறான ஒரு பாதுகாப்பினை எந்தவொரு தரப்பாலும் ஏன் வழங்கமுடியவில்லை எனும் கேள்வியினையும் முன்வைத்தார்.

Australian Medical Aid Foundationல் பணிபுரிந்து வருபவராகிய வைத்தியக் கலாநிதி சதீஸ் நடராஜா

இதனைத் தொடர்ந்து திருமதி சுகந்தி அவர்கள், „Cholai Children’s Welfare Association“ல் பணியாற்றியதனூடாக அவர் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்தார். அத்துடன் நடைமுறை அரசு இயங்கிய காலப்பகுதியில் செஞ்சோலை இயங்கியதைப்பற்றியும், 2009ம் ஆண்டு அவ்வரசின் அழிவிற்குப் பின்னர் அண்மைபில் மீண்டும் திறக்கப்பட்ட செஞ்சோலையின் இயக்கத்தைப்பற்றியும் தனது அனுபவங்களின் அடிப்படையில் அவ்வுரையில் அவர் எடுத்து விளக்கினார். 

„Cholai Children’s Welfare Association“ல் பணியாற்றிய திருமதி சுகந்தி அவர்கள்

அடுத்து அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட எழுச்சிப் பாடல்களின் „கோர்வைக்கு நடனாலயா நடனப்பள்ளியின்“ சார்பாக செல்வி ருக்‌ஷிகா அவர்கள் ஒர் எழுச்சியான நடனத்தினை வழங்கி இளைஞர்களின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். 

„நடனாலயா நடனப்பள்ளியின்“ சார்பாக செல்வி ருக்‌ஷிகா அவர்கள்

மேலும், நூல் வெளியீட்டு நிகழ்வின் பிரதானப் பேச்சாளர்களான; சோசலியக் கவுன்சிலர், „Sue Bolton“ மற்றும்  திரு „உமேஷ் பேரின்பநாயகம்“ ஆகியோர் இந்நூலின் பலதரப்பட்ட அரசியற் செய்திகளைப் பகிர்ந்தனர். 

சோசலியக் கவுன்சிலர் „Sue Bolton“
திரு „உமேஷ் பேரின்பநாயகம்“

ஆயுதப்போராட்டத்தின் வீரியங்களைக் கடந்து விடுதலை எனும் கொள்கையைப் பலப்படுத்துமுகமாக அமைக்கப்பட்ட ஓர் அரசின் ஆவணமாக அமையும் இந்நூலின் முக்கியத்துவத்தையும் அதன் அம்சங்களையும் சுற்றிக்காட்டிய Sue Bolton, இவ்வரசும் இந்நூலும் வேறு பல ஒடுக்குமுறைக்குட்பட்ட சமூகங்களுக்கு ஓர் முன்னுதாரணமாக அமைகின்றது என்றும் குறிப்பிட்டார். இக்கருத்து நந்திக்கடல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் தனது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் Ben Hillier அவர்கள் காணொளியினூடாகத் தெரிவித்திருந்தார். இந்நூலின் முக்கியத்துவத்தை விளக்கிய இவர், இவ்வாறான விடுதலை வரலாறுகளின் முடக்கல்களின் சர்வதேசக் கூட்டுச்சார் பின்புலத்தையும் குறிப்பிட்டார். 

Ben Hillier அவர்கள் முன்னாள் போராளி சந்தியா தொடர்பாக எழுதிய நூல்
2017ம் ஆண்டு இந்தோனேஷயாவில் காலமான மாலதிபடையணியின் முன்னாள்போராளி சந்தியா

இதனைத் தொடர்ந்து, மெல்பேர்ன் வாழ் இளம் ஈழத்தமிழ் செயற்பாட்டாளராகிய திரு உமேஷ் அவர்கள், நூல் விமர்சனம் ஒன்றினை வழங்கினார். இந்நூலிலிருந்து சில கட்டமைப்புக்களை எடுத்துக்காட்டி விளக்கியதோடு, பதிவுக்குட்படுத்தப்பட்ட ஆவணங்கள் பற்றியும்அவர் விளக்கியிருந்தார். அத்துடன், அவுஸ்திரேலிய அரசின் இலங்கை அரசுடனான Indo Pacific ஒப்பந்தங்களால் பலப்படுத்தப்படும் இராணுவ உறவுகளாலும், புகலிடம் கோருவோருக்கெதிரான கொள்கைகளாலும், இவ்வாறான ஆவண முயற்சிகளுக்கு பெரும் தடைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றைக் களைவதனூடாக, அவுஸ்திரேலிய இளைஞர்களும் அக்கினிப் பறவைகள் அமைப்பின் இவ்வரலாற்று ஆவண முயற்சியில் இணைந்துகொள்வதற்கான ஓர் பாதையினை அமைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். 

இந்நூலின் முதலாவது பிரதி மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு இளைஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சமர்ப்பணம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நூலின் முதலாவது பிரதி மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு இளைஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,மெல்பேர்ன் வாழ் இளைஞர்களின் சார்பாகவும், அக்கினிப் பறவைகளின் சார்பாகவும், மெல்பேர்ன்வாழ் அங்கத்தவர்களுக்குச் சிறப்புப் பிரதிகள் திரு உமேஷ் அவர்களால் வழங்கப்பட்டன. இதில் கல்வி, வர்த்தக மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு நூல்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. 

அடுத்து, புரட்சி Mediaவின் ஒருங்கிணைப்பாளராகிய திரு. நிதர்சன் அவர்கள், அமைப்பின் சார்பாக ஏற்புரையினை காணொளியினூடாக வழங்கினார். அடுத்தகட்டப் போராட்டத்தினைப்பற்றி அவர் எடுத்துரைத்த அரசியற்கருத்துகளை வரவேற்ற மக்கள் இவ்வாறான செயற்பாடுகள் அவுஸ்திரேலியாவில் மேலும் முன்னெடுக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அக்கினிப் பறவைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், செல்வன் யதுராம் அவர்கள் வழங்கிய நன்றியுரையினைத் தொடர்ந்து உறுதிமொழியுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது. மாவீரர் இட்ட பாதையிலும், தலைவர் காட்டும் வழியிலும் உறுதியாகப் பயணிக்கும் அக்கினிப் பறவைகள் அமைப்பினரினைப் போன்றும், அவர்களுடன் இணைந்து நிற்கும் சக சிட்னி வாழ் இளைஞர்களைப் போன்றும் தம்மால் முடிந்தவரை செயற்பட முனைவதாக மெல்பேர்ன் வாழ் மக்களின் சார்பாக இளைஞர்கள் உறுதி எடுத்துக்கொண்டார்கள். 

“2009ம் ஆண்டில் அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தினது துணையுடன் அரங்கேற்றப்பட்ட தமிழினவழிப்பு, இன்றுவரை கட்டமைக்கப்பட்ட முறையில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. தமிழீழ மக்களாகிய நாம், அவ்விளைநிலத்தில் பிறந்த நந்திக்கடல் கோட்பாட்டினை அடிப்படையாக வைத்து, அனைத்து இடையூறுகளையும் கடந்து, தமிழிறைமையை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம். தமிழர் எனும் எமது அடிபணியா அடையாளத்தை எமது சிந்தனை, செயல் அனைத்திலும் முன்னிறுத்தி, எம் தேசத்தின் விடியல் வரை எமது அடிப்படைக்கொள்கைகளை விட்டுக்கொடுக்காது தெளிவாகச் செல்வோம். 

ஈழத்தமிழ் இளைஞர்களாகிய நாம், எமது போராட்டத்தின் முன்னிலையில் நின்று, தமிழிறைமையினை என்றும், எதிலும், எப்படியும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று உறுதியெடுத்துக்கொள்கிறோம். வெல்வது உறுதி” என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் செல்வி மது அவர்கள் அங்கு கூடிய மக்களின் சார்பாகப் பிரமாண மெடுத்துக் கொண்டதோடு, மக்களின் “தமிழரின் தாகம்,தமிழீழத் தாயகம்”  எனும் ஒருங்கிணைந்து முழக்கத்துடன் மிகவும் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு நிறைவுபெற்றது. 

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*