அரசியல் தளமும் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போரும் – பாகம் 1

கடந்த 04.11.18 அன்று அரசியல்தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.
அக்கினிப் பறவைகள் அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சந்திப்பின் நோக்கம் அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களின் அரசியற்பின்னணியினை வெளிப்படுத்துவதுமாகும்.

இவ்வரசியல் பின்னணியினை விளங்கிக்கொள்வதற்கு

– அரசியற்தளம் என்றால் என்ன?
– ஆயுதப்போராட்டம் என்றால் என்ன?
– நந்திக்கடற் கோட்பாடு
– ஐந்தாம் கட்ட ஈழப்போர்

போன்ற விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல்தளம் என்றால் என்ன?

ஒரு அரசியற் கொள்கையினைச் சுதந்திரமாக நிறுவும் இடமே அரசியல் தளம் ஆகும்.

நாங்கள் எமது விடுதலைப் போராடத்தை ஒரு எடுத்துக்காட்டாக எடுக்கும்பொழுது, எமக்கு இரண்டு வகையிலான அரசியற்தளங்கள் உள்ளன. முதலாவது அரசியற்தளம் நடைமுறையிலிலுள்ள ஒரு அரசியற்தளமாகும். அதாவது 1948லிருந்து 1977வரை தமிழர்களின் போராட்டமானது இலங்கை அரசின் அரசியல் தளத்திற்குள்ளிருந்து கொண்டே மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் எமக்கான தீர்வு காணமுடியாத படியினாலும் மற்றும் எம்மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதனாலும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுத் தமிழர்களின் ஜனநாயக ஆணை பெறப்பட்டிருந்தது. அதற்குப் பின் 6ம் திருத்தச்சட்டத்தினூடாக இலங்கைக்குள் தமிழர்களுக்கான அரசியல் தளம் முடக்கப்பட்டவுடன் தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டம் வேகம்கொண்டது.

ஆயுதப் போரட்டம் என்றால் என்ன?

ஒரு அரசின் ஆயுத ஏகபோகத்தைத் தகர்த்து, அதனூடாக ஒரு அரசியற் தளத்தை அமைப்பதே ஆயுதப் போராட்டமாகும்.

அதாவது ஒரு நாட்டிற்குள் அந்நாட்டு அரசின் ஆயுத ஏகபோகம் உள்ளது. அதன் அர்த்தம், அந்த அரசுக்கு மட்டுமே வன்முறையையோ அல்லது ஆயுதங்களைப் பிரியோகிக்கவோ உரிமை உள்ளது என்பதாகும். வேறொருவருக்கு அவ்வுரிமை இல்லை என்பதுமாகும்.

6ம் திருத்தச் சட்டத்தினூடாக இலங்கைக்குள் தமிழர்களுக்கான அரசியல் தளம் மூடப்பட்டத்தின் காரணமாக, தமிழர்கள் தங்களின் அபிலாஷகளைத் தெரிவிக்க முடியாத நிலையேற்பட்டது. இதனாலேயே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தங்களின் அபிலாஷகளை நிறைவுசெய்யும் மற்றும் ஒரு அரசியற்தளத்தை நிறுவவும் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கினார்கள். இதன் அடிப்படையிலேயே இலங்கை அரசின் ஆயுத ஏகபோகம் தமிழரின் தாயகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் உடைக்கப்பட்டு தமிழர்களுக்கான ஒரு அரசியல் தளம் உருவாக்கப்பட்டது.

வெறுமெனே ஒரு அரசியல் தளத்தை உருவாக்கினால் போதாது, அவ்வரசியல் தளத்தை நிர்வாகம் செய்ய வேண்டும். ஏனெனில் அரசியல் தளம் நிறுவப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்படாத பட்சத்தில், அம்மக்கள் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தப்படுவர். அதனாலேயே தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்ட அரசியல் தளத்தை மேம்படுத்தவும் மற்றும் அதனைப் பாதுகாக்கவும் தமிழீழ நடைமுறை அரசு நிறுவப்பட்டது.

அத்துடன் அவ்வரசியல் தளத்திற்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளான தமிழிறைமைக் கொள்கையும் மற்றும் அடக்குமுறையற்ற சமூகக் கொள்கையும் நிலைநாட்டப்பட்டிருந்தது.

இறைமையென்பது ஒரு பிரதேசத்தில் அதியுச்ச சக்தியானது அவ்விடத்தின் அரசே எனப்பொருள்படும். அதாவது எவராலும் அல்லது எவ்வரசாலும் அந்த அரசின் முடிவை கேள்விக்குட்படுத்த முடியாது. அதன் அடிப்படையிலேயே தமிழர் தாயகத்தில் தமிழிறைமை நிறுவப்பட்டு, அதன் பால் இலங்கை, இந்திய அரசுகளுடன் நேரடி யுத்தம் மேற்றக்கொள்ளப்பட்டு மற்றும் தமிழீழத்தின் வளங்களைச் சுரண்ட வந்த யப்பானிய, அமெரிக்க கப்பல்கள் 90களில் தகர்க்கப்பட்டன.

ஒரு புறத்தில் தமிழர்களின் பகுதியில் தமிழர்களே அதியுச்ச சக்திகளாக விளங்கியதோடு மறுபுறத்தில் தமிழர்களின் சமூகம் பல மாற்றங்களைக் கண்டது. பல வகையிலான அடக்குமுறைகள் அச்சமூகத்தில் களையப்பட்டன. குறிப்பாக பெண்களின் விடுதலையும் மேம்படுத்தப்பட்டது. தற்பொழுது மேற்கத்தைய உலகமே மனிதநேயம் கூடிய நாடுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் பெண்களின் விடயத்தில் தமிழீழத்தில் நிலவிய சமூகச் செயற்பாடுகள் மேற்கத்தைய உலகத்தை விட வளர்ச்சிடைந்திருந்தது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

2018ம் ஆண்டே சுவீடன் நாட்டில் ஒரு பெண்ணின் சம்மதத்தைப் பெறாமல் உறவுகொண்டால், அது பாலியல் வன்முறையென்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தமிழீழத்தின் சட்டத்தை எடுத்துப் பார்த்தால், அது அன்றைய காலப்பகுதியிலேயே வரையறுக்கப்பட்டிருந்தது. அத்தோடு 2018ம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் பாராளுமன்றத்தில் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட பதவிகளில் 30% பதவிகள் பெண்களுக்குக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தமிழீழ நடைமுறை அரசின் பல திணைக்களகங்களின் முன்னணிப் பொறுப்புகள் பெண்களுக்கென வகுக்கப்பட்டிருந்தது என்பதும், சில துறைகளில் 50%க்கு அதிகமானோர் பெண்களே வேலை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனை „எனது நாட்டில் ஒரு துளிநேரம்“ எனும் நூலில் ந. மாலதி அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.

இக்காரணங்களினால் தமிழீழத்தின் அரசியல்தளத்திற்குள் தமிழர்களின் அபிலாசைகளை எந்த நாட்டினாலும் மழுங்கடிக்க முடியாமல் இருந்தது மட்டுமல்லாது உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒரு சமூகவடிவம் நிறுவப்பட்டிருந்தது. அதனை வெளியக அச்சுறுத்தல்களிலிருந்து தமிழீழப் படையணிகள் பாதுகாத்தன.

நந்திக்கடல் கோட்பாடு

நந்திக்கடல் கோட்ப்பாட்டினைப் புரிந்து கொள்வதற்கு கிளர்ச்சி முறியடிப்புத் திட்டங்களை புரிந்துகொள்ளவேண்டும். கிளர்ச்சி முறியடிப்புத் திட்டம் என்பது, ஒரு போராட்டத்தின் காரணாமாக உருவாகிய அரசியல் தளத்தை அகற்றி அதன் எதிர்த்தரப்பான அரசாங்கத்தின் ஆயுத ஏகபோகத்தை மீள நிறுவுவதேயாகும். ஆனால் இக்கிளர்ச்சிமுறியடிப்புத் திடடம் வெறுமெனே இராணுவ உத்திகளை உள்ளடக்கியது மட்டுமல்ல. அதற்குள் அரசியல் மற்றும் மானுடவியல் உத்திகளும் உள்ளடங்கியுள்ளன.

கிளர்ச்சிமுறியடிப்புத் திட்டங்களின் இராணுவ உத்திகளின் நோக்கமானது விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கும் மக்களின் இயல்பு வாழ்கையினைச் சிதைப்பதாகும். அதனூடாக அம்மக்களை போராடத்திலிருந்து விலக்க வைத்து, தங்களின் அடிப்படைப் பிரச்சனைகளின் மீது கவனத்தைச் செலுத்த வைத்தலாகும். இது படுகொலைகள், காணாமல் ஆக்குதல், சித்திரவதை செய்தல், இராணுவக் காவலரண்களை அமைத்தல் போன்றவற்றினூடாக மேற்கொள்ளப்படும். அத்தோடு பல மாற்றுக்குழுக்களை அமைத்து, அவ்விடுதலைப் போராட்டத்தின் மக்கள் ஒருமித்த சக்தியாக உருவெடுப்பதைத் தடுத்தலுமாகும்.

இவ்விராணுவ உத்திகள் தோல்வி காணுமிடத்தே கிளர்ச்சிமுறியடிப்புத் திட்டதின் அரசியல் உத்தி பயன்படுத்தப்படும். அதில் பலமடைந்து கொண்டு வரும் போராட்ட அமைப்பைத் தடுக்கவும் மற்றும் அதன் எதிர்த்தரப்பான அரசாங்கத்துக்கு ஒரு ஓய்வினைக் கொடுக்கவும் பேச்சுவார்த்தை ஒன்று உருப்பெறும். இதனூடாக ஒரு புறத்தில் அப்போராட்ட அமைப்பின் கவனத்தைச் சிதறடித்து, அவ்வமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தி அதனை பலவீனப்படுத்துவதோடு மறு புறத்தில் அரசு பலப்படுத்தப்படுகிறது.

இவ்விரண்டு உத்திகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட போதிலும் அவை விடுதலைப் புலிகளினால் வெற்றிகொள்ளப்பட்டதனால் இனவழிப்பு அம்சங்களைக் கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு 2009ம் ஆண்டு முடிவுபெற்றது. தமிழிறைமை அழிக்கப்பட்டு ஒரு தசாப்தம் முடிவுபெறுகிற போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளால் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு பலருக்குப் புரியாமல் உள்ளது. அவர்கள் இறுதியில் எடுத்த முடிவே நந்திக்கடல் கோட்ப்பாடு என்றழைக்கப்படுகிறது.

கிளர்ச்சி முறியடிப்புத் திட்டத்தின் வெற்றி ஒரு விடுதலை அமைப்பின் ஆயுதம் தரித்த உறுப்பினர்களைக் கொல்வதன் மூலம் நிலைநாட்டப்படுவதில்லை. அப்போராட்ட அமைப்பின் தலைமையினைச் சரணாகதியடைய வைப்பதே கிளர்ச்சி முறியடிப்புத் திட்டத்தின் வெற்றியாகும். இது 2002ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு ஆராய்வில் தெளிவாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாராய்வானது ஒரு அமெரிக்க இராணுவ கல்லூரியினைச் சார்ந்த ஒருவரினால் எழுதப்பட்டத்தோடு, அந்நபர் நேரடியாக இலங்கைக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு முறியடிக்கலாம் என்ற சில உத்திகளையும் அவ்வாராய்வினூடாக வகுத்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்ட விடயம் என்னவெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது அரசுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் விடுதலை அமைப்புகளில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது என்பதும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வகுக்கப்பட்ட இத்திட்டங்கள் எதிர்காலத்தில் வேறு இடங்களிலும் பயன்படுத்தப்படலாம் என்பதுமாகும்.

இதன் பொருளானது, 4ம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தேசம் கிளர்ச்சி முறியடிப்புத் திடத்தின் ஒரு பரீட்சாத்தக்களமாக விளங்கியது என்பதாகும். அதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தனர் என்பதற்கு 2009ம் ஆண்டு சமராய்வுப் பிரிவின் பொறுப்பாளரான திரு யோகரட்ணம் யோகி அவர்கள் அளித்த ஒரு செவ்வி ஆதாரமாக விளங்குகிறது.

4ம் கட்ட ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் சர்வதேசம் ஒரு திட்டத்தை முன்வைத்தது. ஒருமுறை பிபிசி தமிழோசைக்கு எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய செவ்வியின் போது அவர் கூறிய தகவல் என்னவெனில்:

2009ம் ஆண்டு பல ஆயிரம் மக்கள் இறந்துகொண்டிருந்த நேரத்தில், இந்த யுத்தத்தை ஒரு சரியான முறையில் முடிவடைய வைக்க வேண்டும் என்று ஜப்பான், அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளும் மற்றும் ஐ.நா வும் முடிவெடுத்திருந்தன. அதற்கு அவர்கள் முன்வைத்த திட்டம் என்னெவெனில், இந்தியாவூடகவோ அல்லது ஐ.நா வூடாகவோ ஒரு கப்பல் மூலம் யுத்தப் பிரதேசத்துக்கு நிபுணர்களை அனுப்பி, போராளிகளினதும் மற்றும் பொதுமக்களினதும் விபரங்களைப் பதிவு செய்வதாகவும். அதற்குப் பின் அனைவரையும் கப்பலில் ஏற்றி, கொழும்புக்குக் கொண்டுவந்து, இலங்கை அரசிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வைப்பதோடு. தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் அவர்களைத் தவிர்த்து, ஏனையோருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுத்தலுமாகும் . ஆனால் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மறுத்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் இறந்துள்ளார்கள்.

இத்தகவல்களை எரிக் சொல்ஹெஎய்ம் வழங்கிய இன்னொரு செவ்வியுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். அதாவது அச்செவ்வியில் வெள்ளைக் கோடி விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, அவர் கூறியதாவது:

மே 17ம் திகதி தன்னை புலித்தேவன் அவர்கள் தொடர்பு கொண்டு, தாம் இராணுவத்தினரிடம் சரணடையப் போகிறோம் என்று குறிப்பிட்டதாகத் தெரிவித்திருந்தார். அவர் புலித்தேவன் அவர்களிடம் நேரடியாகப் பேசாவிடினும், புலித்தேவன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பதில்:

தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது. காலம் கடந்து விட்டது. ஆனால் உங்களுக்கு போராட்டத்தைக் கைவிட பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தது என்பதாகும்.

இத்தகவல்களை உன்னிப்பாகக் கவனித்தோமேயானால் யார் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்பது உங்களுக்குப் புலப்படும். தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்தைக் கைவிட்டு, சரணாகதியடைந்தால்தான் அம்மக்கள் சர்வதேசத்தால் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஆதலால் விடுதலைப் புலிகள் மீது ஒரு அழுத்தத்தை பிரியோக்கிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்மக்களினது அழிவு பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கு விடுதலைப் புலிகள் எடுத்த நிலைப்பாடு என்ன? அதற்கு நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலைக் கேட்போம்.

இது தான் விடுதலைப் புலிகளின் இறுதி நிலைப்பாட்டாக இருந்தது. அதாவது ஒரு புறத்தில் மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மறுபுறத்தில் சரணாகதி அடையாமல் இறுதி வரை உறுதியுடன் போராடி மடிந்தார்கள். இதுவே நந்திக்கடல் கோட்பாடாகும்.

இதனூடாக சர்வதேசத்துக்குச் சொல்லப்பட்ட விடயம் என்னவெனில், எந்நேரத்திலும் தமிழிறைமை விட்டுக்கொடுக்கப்பட முடியாதது என்பதாகும். அத்துடன் விடுதலைக்காகப் போராடும் வெவ்வேறு தேசிய இனங்களின் சார்பாகவும் இந்நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என்பதுமாகும். ஏனெனில் 2002ம் ஆண்டு எழுதப்பட்ட ஆராய்வின் படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது உபயோகிக்கப்பட்ட இத்திட்டங்கள் எதிர்காலத்தில் வேறு இடங்களிலும் பயன்படுத்தப்படும். அத்துடன் உலகத்தின் அடக்கும் அணைத்து வல்லாதிக்க சக்திகளும் ஒன்றிணைந்து ஒரு போராடும் இனத்தின் போராட்டத்தை அழிக்க நினைக்கும் பொழுது, அப்போராடும் இனம் எடுக்கும் நிலைப்பாடானது அனைத்துப் போராடும் இனங்களுக்குமானதாகும். இதுவே நந்திக்கடல் கோட்பாட்டின் உள்ளடக்கம்.

அத்துடன் நந்திக்கடல் கோட்பாட்டினூடாக தமிழர்களுக்கும் ஒரு தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளது. அதற்கு நந்திக்கடலில் மௌனிக்கப்பட்ட ஆயுதங்களின் அர்த்தத்தை சுதுமலைப் பிரகடனத்துடன் ஒப்பிட வேண்டும்.

அப்பிரகடனத்தில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் இவ்வாறு கூறியிருந்தார்.
„எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத் தான் குறிக்கிறது.“

இதன்படி ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டதற்கான அர்த்தம் என்னெவென்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளே உணர்ந்து கொள்ளவேண்டும்.

இதுவரை நாம் அரசியல் தளம், ஆயுதப் போராட்டம் மற்றும் நந்திக்கடல் கோட்பாடு போன்ற விடயங்களைப் பார்த்துள்ளோம்.
இவ்விடயங்களின் அடிப்படையிலேயே ஐந்தாம் கட்ட ஈழப்போரைப் பார்த்தாக வேண்டும். ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடர்பான காணொளியினை இக்காணொளியின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

வெல்வது உறுதி

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*